கேஸெட் ப்ளேயர் பாடல்கள்.
“ஒரு நிமிஷம் பேசலாமா?” என்றர் சரவணன். போன் அழைப்பு கரகரவென்று இருந்தது.
பேஸ்புக் அக்கவுண்ட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததில், அதிக நேரம் கிடைப்பதாக ஒரு உணர்வு . அது உண்மையென நிரூபித்தது, நண்பர்களோடு அளாவளாவும் நேரங்கள்.
“சொல்லுங்க” என்றதும் மடமடவெனப் பொழிய ஆரம்பைத்தார். ” என்ன சொல்லன்னு தெரியல. எனக்கும் குமாருக்கும் நடுவே ஒரு பெரிய விரிசல் வந்திருச்சுன்னு நினைக்கேன்.”
“சும்மா உளறக்கூடாது. சும்மா சில நாட்கள் மூடு அவுட் ஆயிருக்கும். பேசாம இருந்திருப்பான். வேலையில்லாம இருக்கீயளோ?”
“இல்ல. அவன் சில மாசமாகவே, அவங்கம்மாகிட்ட மட்டும்தான் பேசறான். எங்கிட்ட போனைக் கொடுக்கச்சே, கால் கட் ஆயிறுது, இல்ல கட் பண்ணிடறான். அபூர்வமா, பேச்சு இருந்தாலும், ‘ என்னப்பா, எப்படி இருக்கீங்க?’ அவ்வளவுதான்.”
“அட, எதாச்சும் மனஸ்தாபம் இருந்தா பேசித் தீத்துக்க வேண்டியதுதான? நீங்க கேக்கலாமே? “என்னல, என்ன விசயம்?னு கேட்டாச் சொல்லிட்டுப் போறான்”
“நான் எதுக்குக் கேக்கணும்?” வெடித்தார் சரவணன். “அவனுக்கு எவ்வளோ செஞ்சிருக்கேன்? சின்ன பயலா இருக்கச்சே, நான் கோவிச்சுக் கிட்டேன்னா, அவனா வந்து பேசுவான். சரியாயிரும். இப்ப, தனியா டெல்லியில இருக்கிற தைரியம். திமிரு. நாம வேண்டாதவனா ஆயிட்டம்.”
“சரவணன்” என்றேன் பொறுமையாக, ” அப்படி எதாச்சும் அவன் சொன்னானா? அவன் போக்குல எதாச்சும் மாற்றம் இருக்கா?ன்னு உங்க மனைவிகிட்ட கேட்டீங்களா? “
“அதெல்லாம் எதுக்கு? எனக்குத் தெரியுதே?!. ‘தங்கச்சி கலியாணத்துக்கு கொஞ்சம் சேத்து வையி. அடுத்த வருசம் தை பிறந்தா, ஜாதகம் எடுக்கணும்’-னு சொல்லறேன்…அவன், ரூம் அடைச்சு நிக்கற மாதிரி யானை சைஸ்ல ஒரு டி.வி வாங்கி வைச்சிருக்கான். திட்டிப்பிட்டேன். கோவம். இன்னும் அப்படியே போயிட்டிருக்கு. பழைய மாதிரி இல்லடே, பசங்க. மாறிட்டானுவ”
“உங்ககிட்ட ஒரு பானஸானிக் கேஸட் ரிகார்டர்/ப்ளேயர் இருந்திச்சே? அதுவும், டபுள் கேஸட் ரிகார்டர். இருக்கா?” என்றேன்.
சட்டெனத் தடுமாறினார். கொஞ்சம் கோபமாக , ” கிடக்கு. அதப் பத்தி என்ன பேச்சு இப்ப?”
“பழைய பாட்டு, உங்க ஊர்ல, கடையில கொடுத்துப் பதிஞ்சு கொண்டுவருவீங்க. நாம ரூம்ல இருக்கச்சே, எல்லாரும் பழையபாட்டு லிஸ்ட் போட்டு, அதுல பொறுக்கி எடுத்து, ஊருக்குப் போறச்ச, ஸோனி ஸி-90 கேசட்டுல பதிவு பண்ணிக் கொண்டு வருவீங்க. அதுல இருந்து உங்க டபுள் கேஸட் ரிகார்டர்ல பதிவு செஞ்சுகிட ஆவலாக் காத்துகிட்டிருப்பம், நாங்கல்லாம்!”
சிரித்தார் ‘ பொன்னான காலமய்யா அது! ஒவ்வொரு பாட்டும் மனப்பாடம்லா? எத்தன தடவ கேட்டிருப்பம்!”
“நீங்க, எம் ஜி யார் விசிறி. ‘பெண் போனால்” பாட்டை அப்படியே ம்யூஸிக்கோட பாடுவீங்களே?”
கடகடவென்று சிரித்தார் ” இப்பவும் நினைவு வச்சிருக்கீங்களே?!”
“எந்த அளவுக்கு அதுவெல்லாம் தாக்கியிருக்குன்னா, எங்கயாச்சும் ‘பெண் போனால்’ பாட்டு கேட்டா, அடுத்த பாட்டு ” இந்தப் பச்சைக்கிளிக்கொரு” மனசு எதிர்பார்க்குது. நம்ம கேசட்டுல அதுதான அடுத்த பாட்டு?!”
“கரெக்டு!” என்றார் வியந்து. “எனக்கும் இப்படித்தான் எதிர்பார்ப்பு வரும். ‘நினைக்கத் தெரிந்த மனமே’ பாட்டுக்கப்புறம் ” பொய்யிலே பிறந்து ” பாட்டு நம்ம கேஸட்டுல. நான் வாய் விட்டுப் பாடிறுவனா?, பக்கத்துல இருக்கறவங்க, ஒரு மாதிரியாப் பாப்பாங்க. வேற பாட்டு வந்திருக்கும்!”
“இதான் சரவணன், பழக்கத்தோட வலிமை. முந்தி நாம தீவிரமா ரசிச்சது, நடந்ததை இப்பவும் எங்கெல்லாமோ, மனசு எதிர்பார்க்கும். காஸட் காலம் முடிஞ்சாச்சு. அதுல நாடாவெல்லாம், குடல் உருவிப் போட்ட மாதிரி வெளிய வந்து, நாம அதைத் தூரப் போட்டாச்சு. இப்ப mp3 ப்ளேயர்ல கேக்கறப்ப, வேற பாட்டு வரும். இதுதான் எதார்த்தம். நம்ம பழைய கேசட்டை இன்று இண்ட்டெர்னெட் ஸ்ட்ரீமிங்ல எதிர்பார்ப்பது எப்படி மடமையோ, அது மாதிரிதான், நம்ம பிள்ளைகள், அன்னிக்கு இருந்த மாதிரி இப்பவும் இருக்கணும்னு எதிர்பார்க்கறது. அவர்கள் மாறுகிறார்கள், அவர்கள் வாழ்வு. நாமும் மாறணும். “
அமைதியாக இருந்தார் ” அப்ப நம்ம பிள்ளைகள் கிட்ட நல்லதை எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொல்றீங்க?”
“குதர்க்கமாப் பேசக்கூடாது. அவங்க நல்லா இல்லைன்னா, இவ்வளவு வளர்ந்திருப்பாங்களா? நாம பழசை எதிர்பார்த்து, நடக்கலைன்னா, புதுசா வர்றது, மோசமில்லைன்னா, ரசிக்கக் கத்துக்கறதுதான் நல்லது. ‘பெண் போனால்’ பாட்டுக்கப்புறம் ‘பொய்யிலே பிறந்து’ பாட்டு வரலைன்னா என்ன? ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை’ பாட்டு வந்தாலும் நல்லதுதானே? வொய் திஸ் கொலைவெறி’ வந்தாத்தான் கவலைப்படணும்”
அவர் சிரித்தார். “அடுத்த பாட்டு முணுமுணுக்காதீங்க’-ந்னு சொல்லுறீங்க? “
“பாடுங்க. அடுத்த பாட்டு, மாத்தி வந்தா, ஒரு வியப்பான சிரிப்புடன், அதை முணுமுணுக்கக் கத்துக்குங்க. நீங்க பதப்படுத்தின கேஸட்டுல உங்களுக்குத் தெரியாத பாட்டு ஒண்ணும் வராது. கவலைப்படாதீங்க. வந்தா, மெல்லச் சொல்லிப்பாருங்க. தானா, பாட்டு மாறும்.”
நான் கேட்காமலேயே ” யார் அந்த நிலவு? டொய்ங்க்ட டொட்டொ டொடடெய்ங்க்” என்று பாட்டு வந்தது மறுமுனையில்.
சிரித்தேன். “அண்ணாச்சி, அது சிவாஜி பாட்டு. நீங்க மறந்தும் சிவாஜி புகழா மாந்தராச்சே? எம் ஜியார் மட்டும்லா உங்களுக்குத் தெய்வம்?” என்று சொல்லவந்தவன் அடக்கிக் கொண்டேன்.
மறுமுனையில் கரகரப்பு நின்றுபோய், குரல் தெளிவாகிப் பாட்டு சீராக வந்துகொண்டிருந்தது.
‘நீங்க பதப்படுத்தின கேசட்டுல உங்களுக்குத் தெரியாத பாட்டு ஒண்ணும் வராது’ இந்த ஒருவரி போதும் படிக்கிற அத்தனை அப்பாக்களின் மனதும் சற்று நின்று நிதானித்து சிந்திக்கும். பாராட்டுகள்.
நானும் முகநூலிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். நிறைய நேரம் கிடைக்கிறது என்பது உண்மை. தொடர்ந்து பிளாக் எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களை இங்கே படிக்கிறேன்.
மிக்க நன்றி மேடம் _/\_
வணக்கம்.
உங்களது கம்பனும் சேல்ஸ் மீட்டிங்கும் கதையை எனது நண்பர் ஒருவருக்கு சொல்வனம் இணைப்பாக அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் பின்னூட்டம் எனக்கே அனுப்பிவிட்டார். சொல்வனத்தில் போடுங்கள் என்று சொல்லியும் நீங்களே சுதாகருக்கு அனுப்பிவிடுங்கள் என்றார். அதனால் இங்கேயே அதை பதிந்து விடுகிறேன்.
தவறாக நினைக்க வேண்டாம்.
திரு சௌந்தரராஜனின் கருத்து:
இராவணன் மனதில் இராமனை எதிர்க்கத் துணிந்துவிட்டான் அல்லது முடிவு செய்துவிட்டான். போர்புரிய ஆயத்தமாக மந்திராலோசனை செய்கிறான். இதில் இராட்சத குணம் (போர்க்குணம்) மீதூரியவர்கள் அவனை போர் செய்யவே தூண்டுகிறார்கள். அந்த கும்பளிலும் சிறிது அறச்சிந்தனை உடையவர்கள் நேரடியாக இல்லாவிடினும் சற்றே இச்சகமாக அவனுக்கு நன்மையை தெரிவிக்கின்றனர் (இங்கு ஜித்தைப்போல்) அதேசமயம் போரையும் ஆதரிப்பதாகப் பேசுகின்றனர். தங்ள் தோள்தினவு தீரவேண்டும் என்பதே இராக்கத கூட்டத்தின் எண்ணம். அதீதமான தன்னம்பிக்கை, தாம் வெல்வோமென்று. போர்சூட்சுமம் தெரியாதவர்கள். (இங்கே மற்ற கம்பனிகளுடன் போட்டிபோடுகையில் குழுமம் சற்றே விட்டுக்கொடுத்தலே சூட்சுமம்).
ஆனால் எல்லோரையும்போல் வாயடைத்து நின்றால் இராவணன் மட்டுமன்றி இலங்கைவாழ் குடிகளும் அழிந்தேபோம் என்பதை மனத்தில் கொன்டு விபீடனன் விட்டுக்கொடுக்க அறிவுறுத்துகிறான் (இங்கே உதயகுமார்போல்) ஏனெனில் இப்போதும் அறிவுறுத்தாவிட்டால் பின் எல்லாமும் அழியும் (இங்கே குழுமமே முழுகிப்போய்விடும்).
ஆகவே உதயகுமார் ஆலோசனை கூறியது தவறல்ல.
சுனிலின் ஈகோ அவரை கோபமாக பேசவைத்தது. அல்லது உதயகுமாரை சாடியதன் மூலம் தன் இயலாமைக்கு (கம்பனி மேலிடத்திற்கு காம்ப்ரமைஸுக்கு எடுத்துச்சொல்லி மார்க்கெட்டின் யதார்த்தத்தைப் புரியவைப்பது) ஒரு வடிகால் தேடியுள்ளார். இதனால் நல்ல அனுபவமும் கம்பனிமீது அக்கறையும் கொன்ட உதயகுமாரை இழக்கநேரிடும் (விபீடனனை இழந்ததுபோல்) இழந்தபின் புலம்பலில் (மண்டோதரியின் நிலை) ஏதும் பயனில்லை. உதயகுமாரின் நண்பர் இந்த கோணத்தில் பேசியிருந்தால் அதுவே நல்லது. உதகுமாரின் வாயை கட்டிப்போட வேண்டாம்.
இங்கு பிரசுரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி
அன்புடன்
ரஞ்சனி நாராயணன்