ஒரு சொல் அறிய…

பக்தன் என்றால் எல்லாம் இறைவன் சார்ந்ததாகத்தான் சிந்தனையும், செயலும் , சொல்லும் இருக்கவேண்டுமா? இல் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஒருவன் செய்யாவிட்டால்  குடிகள் எப்படி தழைக்கும்?’

இந்தக் கேள்வியை ஒரு குருவிடம் ஒருவ்ர் கேட்டதை சமீபத்தில் ஒரு வீடியோவில் காண நேர்ந்தது. அவர் புன்னகையுடன் “ காமம் தேவைதான். எப்பேர்ப்பட்ட காமம் தேவை? உலகம் தொடர்ந்து இயங்க்கத் தேவையான காமம் என்ற அளவில். சம்பாதிக்க ஆசைப்படுகிறாய். பொருள் ஈட்டுவதில், பிறர்க்கும் உதவி செய்கிறாய். அந்த அளவில் நல்லது. உடலைப் பேண, உடற்பயிற்சி செய்கிறாய், நல்ல உணவு உண்கிறாய். அதுவும் பிறருக்கு உதவ, நோயால் பிறரைத் துன்பப் படுத்தாமல் இருக்குமளவில்  ஆரோக்கியத்தைப் பேணல் நன்று. கீதையில் ‘காமோஸ்மி பரதர்ஷப’ எங்கிறான் கண்ணன். “ நான் காமம்” என்பதன் பொருளை  அறிய அதன் முன் வார்த்தையைச் சேர்த்து வாசிக்க வேண்டும். சாத்திரங்கள் அனுமதித்த காமம் நான் என்று வருகிறது. எனவே அதுவும் அளவிற்குட்பட்டதாக இருக்கவேண்டும். எதுவும் அவன் குறித்தே என்பது நினைவில் இருக்கவேண்டும். ஒரு சொல்லைப் புரிந்து கொள்ள பலதும் கற்க வேண்டும் நீ”

ஒரு நண்பர் தென் திருப்பேரை பதிகத்தின் முதற்பாசுரத்தை வாட்ஸப்பில் அனுப்பி “ வேத ஒலியும், விழா ஒலியும், பிள்ளைக்குழா விளையாட்டொலியும் “ என்பதில்  வேத, விழா ஒலிகள் இறைவனைச் சார்ந்ததென்று சொல்லலாம். எப்படி பிள்ளைகள் விளையாட்டொலி இறைவனைச் சார்ந்ததாக இருக்கும் ? என்றார்.

இம்மூன்றும் “ மனம், வாக்கு, இயக்கம்  மூன்றும் இறைவனைக் குறித்ததாக இருக்கவேண்டுமென்பதைச் சொல்வது” என்றேன். வாயினாற்பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித் தொழுது என்பதில் வேத ஒலி – சொல், விழா ஒலி – மனத்தின் ஒருங்கு ( சாமிக்கு ரெண்டு முழம் பூ கொடும்மா, என்ற சந்தையின் ஒலி முதல், நாயன வாத்திய ஒலி வரை அனைத்தும் அவன் குறித்தே). ஆனால் பிள்ளைகள் விளையாட்டொலி? அது இயக்கமல்லவா? அதெப்படி விளையாட்டு இறைவனைக் குறித்து இருக்க முடியும்?  இதில் Jayanthi Iyengar அவர்களது பதிவிலிருந்த பிள்ளைகள் விளையாட்டொலி குறித்த வரிகளை சுட்டிக்காட்டியிருந்தேன்.

எதுவானாலும் அவன் பிள்ளைகள் விளையாட்டு என்று அவன் கோவிலில் விளையாடுவதை ரசிக்கிறான் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், விளையாட்டில் எப்படி இறை இருக்கும்?

இப்பாசுரத்திற்கு, ஈடு பன்னீராயிரப்படி வியாக்கியானத்தை அறியத் தலைப்பட்டேன். “ விளையாட்டொலிக்கு உசாத்துணையாக வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் “பாலா அபி க்ரீடமானா “ என்ற வாக்கு காட்டப்பட்டிருந்தது. (விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளும் எனப் பொருள்) இராமனுக்கு மறுநாள் பட்டாபிஷேகம் என்பதால், அயோத்தியில் குழந்தைகள் கூட, இராம பட்டாபிஷேகத்தை  வைத்தே விளையாடினார்கள் என்பது முழு ஸ்லோகத்தில் வரும் பொருள்.

நகர் திருவிழாக்கோலம் பூண்டால், அங்கு சிறுவர்கள் அதன் தாக்கத்தில் தங்கள் விளையாட்டை மாற்றிக் கொள்வார்கள். இராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவிலில் ‘ஜீயோ” என்று அழைத்தால்  ப்ரசாதம் வாங்குவதைக் கண்ணுற்ற சிறுவர்கள், காவிரி மணலை ப்ரசாதமாக வைத்துக்கோண்டு மற்றொரு சிறுவனை ஜீயோ என்றழைக்க, அங்கு வந்து கொண்டிருந்த இராமானுஜர் தாமே சென்று மணல் ப்ராதத்தை வாங்கிக்கொண்டதாக வரலாறு. குழந்தைகள் தங்களுக்கு வரும் தாக்கத்தை தங்கள் விளையாட்டில் இணைத்துக் கொள்வார்கள். இது அயோத்தியில் நடந்தது எனில், தென் திருப்பேரையில் ஏன் நடக்காது? அங்குள்ள குழந்தைகள் தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதரை முன்வைத்து விளையாடியிருக்கலாம். எனவே இயக்கம் ( கர்மம்) இங்கு இறை சார்ந்ததாகவே இருக்கும்.

விளையாட்டு என்பது  விளையாட்டல்ல. அது அலகிலா விளையாட்டுடையானவனுக்கு அருகில் கொண்டு செல்லும் பாதை.

தமிழில் ஒரு சொல்லைப் புரிய, சமஸ்க்ருதம் உதவுகிறது. ஸமஸ்க்ருத வரியான “ மனஸா, வாச்சா, கர்மா” என்பதனை ஆண்டாள் “ வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தூமலர் தூவித் தொழுது” என்று அவையனைத்தும் இறைவனைக் குறித்தே என்று ஒரு வார்த்தையில் விளக்கினாள். அந்த யோகியின் சொல் நினைவு வந்தது ” ஒரு சொல்லை முழுதும் புரிந்துகொள்ளப் பலதும் கற்கவேண்டும் நீ” . இரு பெரு மொழிகளின் கலாச்சாரம் நமக்குக் கிடைத்திருக்கிறது. ஒன்றை வெறுத்து ஒதுக்குவது அவரவர் சிந்தை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s